Published : 18 Jul 2019 08:03 PM
Last Updated : 18 Jul 2019 08:03 PM

கர்நாடகா அரசியல் குழப்பம்: சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு- விடிய விடிய தர்ணா செய்ய எடியூரப்பா முடிவு

கர்நாடக சட்டப்பேரவையில் ஏற்பட்ட கடும் அமளியால் சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதனை எதிர்த்து எடியூரப்பா விடிய விடிய தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கூடிய சட்டப்பேரவையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவின்றி, அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்தி விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது.

இதனால் பாஜகவினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் வேண்டுமென்றே  வாக்கெடுப்பை தாமதம் செய்வதாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவை கூடியபோது ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த பரிசீலிக்குமாறும், அவை நம்பிக்கையை எப்போதும் முதல்வர்  பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் பேரவையில் ஏற்பட்ட கடும் அமளியால் கர்நாடக சட்டப்பேரவையை நாளை காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார். 

காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதம் செய்தாக பா.ஜ.க  எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். இன்று இரவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அறிவுறுத்திய நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா தானும் தன் கட்சி உறுப்பினர்களும் அவையிலிருந்து செல்ல மாட்டோம் என்றும் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை தர்ணா நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையே காணாமல் போன எம்.எல்.ஏ குறித்து இரு கட்சிகளும் மோதிக்கொண்டன.  எம்.எல்.ஏ. ஸ்ரீமந்த் பாட்டீல் புகைப்படங்களை வைத்துக் கொண்டு காங்கிரஸார் பிஜேபி ஒழிக என்று கோஷமிட்டனர். எம்.எல்.ஏ. பாஜக தலைவர் ஒருவருடன் மும்பையில் இருப்பதற்கான ஆதாரங்களை சிவக்குமார் தாக்கல் செய்தார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x