Published : 17 Jul 2019 12:04 PM
Last Updated : 17 Jul 2019 12:04 PM

அக்டோபர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

‘தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்தாததால் உள்ளாட்சி அமைப்புகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் மக்கள்நலப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இருவாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுவரை ஏன் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை?, உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்?  என மாநில தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரை செய்யும் பணி, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்ததால் தான் தேர்தலை நடத்த முடியவில்லை என்று பதிலளித்தார்.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி பணிகளை எப்பொழுது செய்து முடிப்பீர்கள்? என்பதை இரண்டு வார காலத்திற்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x