Last Updated : 28 Jul, 2015 09:43 AM

 

Published : 28 Jul 2015 09:43 AM
Last Updated : 28 Jul 2015 09:43 AM

ஜெ. விடுதலை வழக்கில் அப்பீல்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெ. விடுதலை வழக்கில் கர்நாடக அரசு, திமுக, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த‌து. அப்போது கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழ‌க்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ், 6 தனியார் நிறுவனங்களின் தரப்பில் மூத்த சி.என். சுந்தரம் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

நீதிபதி பினாகி சந்திர கோஷ் கூறியபோது, “ஜெயலலிதா தரப்புக்கு எதிராக கர்நாடக அரசு, திமுக தரப்பு, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த மனுக்களுக்கு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 6 தனியார் நிறுவனங்களும் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். மனுதாரர்கள் ஏதேனும் விளக்கம் தெரிவிக்க விரும்பினால் அதனை, அடுத்த 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இரு தரப்பு மனுக்களையும் ஆராய்ந்த பின்னர் 8 வாரங்களுக்கு பிறகு வழக்கின் விசாரணை நடைபெறும்'' என்றார்.

தடை விதிக்க மறுப்பு

அப்போது குறுக்கிட்ட பி.வி. ஆச்சார்யா, “சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய‌ தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

ஆனால் நீதிபதி பினாகி சந்திர கோஷ் தடை விதிக்க மறுத்துவிட்டார். அவர் கூறியபோது, “உங்களது கோரிக்கை தற்போதைக்கு முக்கியமானது அல்ல. மனு தொடர்பான வாதங்களுக்கு பிறகு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிப்பது குறித்து உரிய முடிவு அறிவிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x