Last Updated : 16 Jul, 2015 09:17 PM

 

Published : 16 Jul 2015 09:17 PM
Last Updated : 16 Jul 2015 09:17 PM

எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு பிராந்திய எல்லைப் பகுதிகளில் கடந்த 15-ம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று அதிகாலையும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏதோ ஓர் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டு அது இந்திய உளவு விமானம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு வெளியுறவுத் செயலாளர் ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

ரஷ்யாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசினார். அப்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி செயல்படவே நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இப்போதைய சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை வேடிக்கை பார்க்க முடியாது. அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

கடந்த சில நாட்களாக இந்தியா மீது பாகிஸ்தான் அரசு அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் ஆளில்லா உளவு விமானம் சீனத் தயாரிப்பு ஆகும். அது இந்திய உளவு விமானம் அல்ல.

மேலும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ஹெலிகாப்டர் பறந்ததாக குற்றம் சாட்டுவதும் தவறான தகவல். அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டனர். அதை தடுக்கவே அப்பகுதியில் ஹெலிகாப்டரில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஹெலிகாப்டர் நுழையவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஹாட்லைன் தொலைபேசியில் இந்திய தரப்புடன் பேசியிருக்கலாம். தற்போதைய விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாகிஸ்தான் தரப்புடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நானும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சத்துடன் பேசியுள்ளேன்.

ஆனால் அதன் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவ தாக்குதலில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x