

போலவரம்: கோதாவரி நதியில் மீன் பிடிக்கச் சென்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், போலவரம் மாவட்டம், கொம்ம கொத்தகூடம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாரதி (40), பாலராஜு (38), ரமேஷ் (38), சுசீலா (37), லட்சுமி (37). இவர்கள் 5 பேரும் நேற்று காலை மீன் பிடிக்க அப்பகுதியில் உள்ள கோதாவரி நதிக்குச் சென்றுள்ளனர்.
நதியின் ஆழமான பகுதிக்குச் சென்று அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், கண் இமைக்கும் நேரத்துக்குள் 5 பேரும் நதிநீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த உள்ளூர் மீனவர்கள், போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும், நதியில் மூழ்கிய 5 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் நதி வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம், கொம்ம கொத்தகூடம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.