Published : 19 May 2014 07:46 AM
Last Updated : 19 May 2014 07:46 AM
பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் நரேந்திர மோடி, புதிய அமைச் சரவையை அமைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த நரேந்திர மோடி, கவுடில்யா மார்கில் உள்ள குஜராத் மாநில அரசு மாளிகையில் தங்கியுள்ளார். இங்கிருந்தபடி, தாம் அமைக்க இருக்கும் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் தொடர் பாக தனது நெருங்கிய சகாவான அமித் ஷா, பாஜக தேசியத் தலை வர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பிஹாரில் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததை யடுத்து, அந்த மாநிலத்தில் அரசி யல் சூழ்நிலை பரபரப்படைந் துள்ளது. இதையடுத்து அந்த மாநில பாஜக பொறுப்பாளர் தர்மேந்தர் பிரதானுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
அத்வானியுடன் சந்திப்பு
ராஜஸ்தான் முதல்வர் வசுந் தரா ராஜே, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் மோடியை ஞாயிற்றுக்கிழமை சந் தித்தனர். இந்த சந்திப்புகளின் போது பாஜக பொதுச் செயலாளர் ஜே.பி.நந்தா உடனிருந்தார்.
பிற்பகலில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி யின் வீட்டிற்குச் சென்ற மோடி, அவருடன் சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனை செய்தார். இதில், அத்வானி வகிக்க இருக்கும் பொறுப்பு குறித்து முடிவானதாகக் கூறப்படுகிறது.
ராஜ்நாத்துக்கு உள்துறை?
தற்போதைய சூழ்நிலை யில், உள்துறை அமைச்சராக ராஜ் நாத் சிங், நிதி அல்லது சட்டத்துறை அமைச்சராக அருண் ஜேட்லி நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அருண் ஜேட்லிக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டால், அருண் ஷோரிக்கு நிதி அமைச்சகத்தை அளிக்க வாய்ப்புள்ளது.
மூத்த தலைவர் அத்வானிக்கு மக்களவைத் தலைவர் பதவியை அளிக்க மோடி விரும்புகிறார். அதை அவர் மறுத்தால், அப்பதவி சுஷ்மா ஸ்வராஜுக்கு அளிக்கப் படும். மக்களவைத் தலைவர் பதவியை அத்வானி ஏற்றுக் கொண்டால், வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்படுவார். முரளி மனோகர் ஜோஷிக்கு கல்வித் துறை, உமா பாரதிக்கு விளையாட்டுத் துறையை ஒதுக்க மோடி திட்டமிட்டுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
30 அமைச்சர்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் (543) எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் மட்டுமே அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும். அதன்படி 81 பேர் வரை அமைச்சராக நியமிக்க வாய்ப்புள்ளது.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் முதல் கட்டமாக 30 பேர் அமைச்சராக பொறுப்பு ஏற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக வின் 71 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதால், அந்த மாநிலத் தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அமைச்சரவையில் அதிக எண் ணிக்கையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திரிகையாளர்களுக்குத் தடை
மோடியை சந்திக்க வந்த தலைவர்கள், அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். குஜராத் பவனில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பத்திரிகையாளர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பொன் ராதாகிருஷ்ணனுக்கு முக்கிய பதவி?
தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இத்தொகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். மோடி தலைமையிலான அமைச்சரவையில் இவருக்கு கேபினட் அந்தஸ்தில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT