Published : 27 Jul 2015 01:12 PM
Last Updated : 27 Jul 2015 01:12 PM
கார் விபத்து வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இந்தி நடிகர் சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மும்பை பாஜக தலைவர் ஆசிஷ் ஷெலர் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
மேலும், சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து வேண்டும் என்று அவர் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவிடமும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடிதம் வழங்கினார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது தூக்குக்கு எதிராக சல்மான் கான் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த விவகாரத்தில் சல்மான் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கார் விபத்து வழக்கின் குற்றவாளி சல்மான் கானின் மேல்முறையீடு மனு மீது மும்பை உயர் நீதிமன்றம் வரும் 30-ம் தேதி விசாரணையைத் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT