Published : 15 Jun 2015 08:51 AM
Last Updated : 15 Jun 2015 08:51 AM
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், “தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றத் தவறும் அரசியல் கட்சி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் வாக்குறுதி தொடர்பாக விதிமுறைகளை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. எனினும் இதுதொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை” என கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் வாக்குறுதி தொடர்பாக விதிமுறைகளை வகுக்குமாறு கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளில், தேர்தல் வாக்குறுதி தொடர்பான விதிமுறைகளை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. தேர்தல் வாக்குறுதி தொடர்பாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஒருசில கட்சிகள் ஆதரவு தெரிவித்த போதிலும் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஜனநாயக நாட்டில் தேர்தல் வாக்குறுதி அளிப்பது தங்களது உரிமை என அக்கட்சிகள் தெரிவித்தன.
இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டபோதிலும், இலவசம் வழங்குவது தொடர்பான வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT