Last Updated : 30 Jun, 2015 08:36 AM

 

Published : 30 Jun 2015 08:36 AM
Last Updated : 30 Jun 2015 08:36 AM

திஹார் சிறையில் சுரங்கம் தோண்டி கைதி தப்பியது குறித்து அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

விசாரணைக் கைதி ஒருவர் சிறையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு திஹார் சிறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திஹார் சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 விசாரணைக் கைதிகள் கடந்த சனிக்கிழமை இரவு தாங்கள் தங்கி யிருந்த 7-ம் எண் கொண்ட அறையின் சுவரை உடைத்துக்கொண்டு 8-ம் எண் சிறைக்கு சென்றுள்ளனர். இந்த அறை சிறை வளாகத்தின் சுற்றுச்சுவரை ஓட்டியிருந்ததால் அந்த சுவருக்குக் கீழ் சுரங்கம் தோண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் வருகைப் பதிவேட்டை பதிவு செய்த சிறை அதிகாரிகள் ஃபைசன் மற்றும் ஜாவேத் ஆகிய 2 கைதிகள் காணாமல் போனதை அறிந்தனர். உடனடியாக நடத்திய தேடுதல் வேட்டையின்போது, ஃபைசன் உடனடியாக பிடிபட்டார். ஜாவேத் தப்பி ஓடிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு டெல்லி ஹரி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடியவரைப் பிடிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நீதித் துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x