Published : 14 May 2014 02:56 PM
Last Updated : 14 May 2014 02:56 PM

ஹைதராபாத்தில் கலவரம்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் இரு மதத்தினரிடையே வன்முறை வெடித்தத்தை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஹதூர்புரா என்ற பகுதியில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கொடியை எரித்ததால் இந்தக் கலவரம் நடந்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. விவரம் அறிந்த போலீசார் அங்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். இரு தரப்பினரும் சரமாரி தாக்குதலில் ஈடுப்பட்டனர். கலவரத்தை அடக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

இதையடுத்து, கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தியதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பதற்றம் காரணமாக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரத்தின்போது 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள், 2 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தை அடுத்து ராஜேந்திர நகர் போலீஸ் நிலைய பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலானது. கலவரம் நடந்த பகுதிக்கு சைபராபாத் காவல் துறை ஆணையர் சி.வி.ஆனந்த் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x