Last Updated : 25 Jun, 2015 04:13 PM

 

Published : 25 Jun 2015 04:13 PM
Last Updated : 25 Jun 2015 04:13 PM

ஏழைகளாக இருப்பது விதி வசம் அல்ல: ஸ்மார்ட் நகர திட்டத்தை தொடங்கிவைத்த மோடி பேச்சு

'ஏழைகளாயிருப்பது விதிவசம் அல்ல. அவ்வாறு ஏழைகள் அவதிப்பட அனுமதிக்க முடியாது' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.

100 ‘ஸ்மார்ட் நகரங்கள்’ அமைக்கும் திட்டம், அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டத்தில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 2 கோடி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் ஆகிய 3 திட்டங்களை பிரதமர் திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், "ஏழைகளாயிருப்பது விதிவசம் அல்ல. அவ்வாறு ஏழைகளை நிலைமை தொடர விட்டுவிட முடியாது. நாட்டின் 40% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு. இதற்க்காக அடுத்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.400,000 கோடி செலவழிக்க திட்டமிட்டுள்ளது.

ஒரு நகரம் எப்படி உருமாற வேண்டும் என்பதை ரியஸ் எஸ்டேட் அதிபர்கள் முடிவு செய்யக்கூடாது, மாறாக அதை நிர்ணயிக்க வேண்டியது அந்நகரத்தில் வாழும் மக்களும் நகர தலைவருமே ஆவர். நகராக்கம் என்பது ஒரு நல் வாய்ப்பாக கருதப்பட வேண்டும். இந்தியா வேகமாக நகரமயமாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா ஒரு சிறு நாட்டையே பிரசவிப்பது போல் நகர்மயமாதல் நடந்து வருகிறது.

கிராமங்களில் இருந்தும் சேரிப்பகுதிகளில் இருந்தும் நகரங்களுக்கு குடி பெயர்பவர்களது எதிர்பார்ப்புகள் மாறும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப சமன் செய்யப்பட வேண்டும். அவ்வாறு இடம் பெயர்பவர்களது எண்ணங்களை பூர்த்தி செய்வது அரசின் கடமையாகும்" என்றார்.

ஊடகங்களுக்கு பாராட்டு:

தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதாகக் கூறிய பிரதமர் மோடி, அத்திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனைத்து ஊடகங்களிலும் பங்கும் பாராட்டுக்குரியது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x