Published : 19 Jun 2015 08:52 PM
Last Updated : 19 Jun 2015 08:52 PM
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடனான சந்திப்பை பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ரத்து செய்துள்ளார். இதன்பின்னணியில் பாஜக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று, நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக அத்வானி அச்சம் தெரிவித்திருந்தார். கேஜ்ரிவால் இக்கருத்தை ஆமோதித்திருந்தார். இந்நிலையில், இச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்வானியின் அலுவலகத்திலிருந்து, கேஜ்ரிவால் அலுவலகத்துக்கு, “வேறு சில பணிகள் இருப்பதால் கேஜ்ரிவாலை தற்போது சந்திக்க முடியாது” என தகவல் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
அடுத்த வாரம் ஏதேனும் ஒருநாளில், அத்வானி கேஜ்ரிவாலைச் சந்திக்க நேரம் ஒதுக்குவார் என அத்வானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அத்வானியுடன் கேஜ்ரிவால் பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்சு திரிவேதி இதுதொடர்பாகக் கூறும்போது, “அத்வானி ஒரு மூத்த தலைவர். அவர் எப்போது யாரை சந்திப்பதும் அவரது சொந்த முடிவு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT