Published : 28 May 2015 08:13 PM
Last Updated : 28 May 2015 08:13 PM

இந்தியாவில் 19 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்: ஐ.நா. தகவல்

நல்ல, ஆரோக்கியமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உலகளாவிய லட்சியம் ஒருபுறம் இருக்க, 194.6 மில்லியன் மக்கள் இந்தியாவில் போதிய உணவு இன்றி வாடுகின்றனர் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்திய மக்கள் தொகையில் 15%-க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். உலகிலேயே இது அதிகமானதாகும். சீனாவை விடவும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு கட்சியும் பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்ற ஜோடனை மொழியைப் பிரச்சாரம் செய்தே ஆட்சியைப் பிடிக்கின்றனர். ஆனால் உயர் பொருளாதார வளர்ச்சி ஒருபோதும் உணவுப் பற்றாக்குறையை தீர்ப்பதில்லை என்பதையே இந்த ஐ.நா. அறிவிப்பு காட்டுகிறது.

"உயர் பொருளாதார வளர்ச்சி அதிகப்பேர்களுக்கான உணவு நுகர்வாக மாற்றம் அடைவதில்லை, நல்ல, ஆரோக்கியமான உணவு என்பதை இங்கு விட்டுவிட்டால் கூட உணவே கிடைக்காதவர்கள் எண்ணிக்கையே அதிகமாகி வருகிறது. அதாவது ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஏழைகள், வறியோர்கள் பயனடைவதில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது” என்று 'உலகில் உணவு பாதுகாப்பின்மை நிலைமைகள்' என்ற அறிக்கை கூறுகிறது.

மேலும், “வளரும் நாடுகளில் கிராமப்புற பகுதிகளில் ஊட்டச்சத்து குறைவுள்ளவர்கள் அதிக விகிதத்தில் உள்ளனர். எனவே விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களை ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் உட்பட்ட அங்கமாக இணைத்து செயல்பட சிந்திக்க வேண்டும்.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவைக் களைந்ததில் 36% முன்னேற்றம் உள்ளது. அதாவது 1990-92களை ஒப்பிடும் போது.

உலகில் மொத்தம் 79 கோடிக்கும் மேற்பட்டோர் உணவுப்பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடுடையோர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் 62% உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்காசிய பகுதி 5 ஆண்டுகளுக்கு முன்னதாக எடைகுறைவான குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகமுள்ள பகுதியாக இருந்தது. ஆனால் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது தெற்காசிய நாடுகளின் எடைகுறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 1990-ம் ஆண்டில் 49.2% ஆக இருந்தது. 2013-ல் 30% ஆக குறைந்துள்ளது.

எடைகுறைவுக்கு வெறும் கலோரிகள், புரோட்டீன்கள் குறைபாடு மட்டுமே காரணம் இல்லை. சுகாதாரமின்மை, நோய், சுத்தமான தண்ணீர் இன்மை. ஆகியவற்றால் ஊட்டச்சத்தை உள்வாங்குவதில் உடல் வலுவிழந்து விடுகிறது.

மேலும் சில காரணிகளாவன: பொருட்களின் விலை உயர்வு, உணவு மற்றும் எரிபொருட்களின் அதிகமாகிக் கொண்டிருக்கும் விலைகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவையும் உணவுப்பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணிகள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x