Last Updated : 26 May, 2014 07:49 AM

 

Published : 26 May 2014 07:49 AM
Last Updated : 26 May 2014 07:49 AM

பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு: தெற்காசியத் தலைவர்கள் பங்கேற்பு

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக் காக 7,000 பாதுகாப்புப் படை வீரர் கள் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு திங்கள்கிழமை பொறுப்பேற்கிறது. நாட்டின் 18-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்பேற்க உள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இவ்விழாவில் பங்கேற்க சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பூடான், நேபாள பிரதமர்கள், மாலத்தீவு அதிபர் உள்ளிட்ட எட்டு அண்டை நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 3,500 பேர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங், மாநில முதல்வர்கள், பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரதிபா பாட்டீல், அப்துல்கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், திரைத்துறையைச் சேர்ந்த அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், லதா மங்கேஷ்கர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

மோடியின் விருந்தினர்களாக அவரது தாய் ஹீராபாய் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்க உள்ளனர்.

இவ்விழாவுக்கான பாதுகாப்பு பணி டெல்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸார், துணை ராணுவப் படையினர், ஆயுதம் ஏந்திய போலீ ஸார் மூன்றடுக்காக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நரேந்திர மோடி தங்கியுள்ள குஜராத் பவனில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை இடையேயான இரண்டு கி.மீ. தொலைவு பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகைக் குள் உள் வளையம், அதிகாரிகள் அடங்கிய வெளி வளையம், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் வளையம் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரெய்சினா ஹில், விஜய்பாத், வடக்கு பிளாக், தெற்கு பிளாக் அலுவலகங்கள் திங்கள்கிழமை பிற்பகல் ஒரு மணியுடன் மூடப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. என்.எஸ்.ஜி. பாதுகாப்புப் படையினர், அதிரடி தாக்குதல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உயர் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பதவியேற்க வரும் நரேந்திர மோடியை, குஜராத் பவனில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைவரை இரண்டு கி.மீ. தொலைவு பிரதமருக்கான முழு பாதுகாப்புடன் அழைத்து வர டெல்லி போலீஸார் ஏற்பாடுகள் செய்துள்ளனர். குடியரசு தின விழாவுக்கு இணையாக இந்திய விமானப்படை மூலம் வான்வழி பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்கள், டெல்லியில் அசோகா ஓட்டல் உள்ளிட்ட ஏழு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜபக்சே வருகையை எதிர்த்துப் போராட்டம்

நாட்டில் முதல் முறையாக பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சார்க் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டெல்லியில் மாணவர் அமைப்பு சார்பில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் வைகோ தலைமையில் திங்கள்கிழமை கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த மதிமுக திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x