Published : 12 May 2015 05:57 PM
Last Updated : 12 May 2015 05:57 PM
நீதிபதிகள் நியமன சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கை, 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்ஜேஏசி) அமைக்கப்பட்டுள்ளது. கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனத்துக்கு மாற்றாக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையடுத்து நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, வழக்கை விசாரிக்க உள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எம்.பி. லோக்குர், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், ‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, 9 நீதிபதிகள் அல்லது 11 நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும்’ என்று கோரி மத்திய அரசு புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆஜராத மூத்த வழக்கறிஞர் நரிமன், ‘மத்திய அரசு அமைத்துள்ள நீதிபதிகள் நியமன ஆணையத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறவில்லை. எனவே, இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
மேலும் இந்தச் சட்டத்தை எதிர்த்து நரிமன், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆகியோர் வாதிடுகையில், ‘வழக்கை தாமதப்படுத்தவே இந்த வழக்கை பெரிய அமர்வு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு கோருகிறது’ என்றனர்.
அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதகி வாதிடுகையில், ‘நீதிபதிகள் நியமன புதிய சட்டத்தை எதிர்க்கும் மனுவை, பெரிய அமர்வுதான் விசாரிக்க வேண்டும். ஏனெனில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான சட்டப் பிரிவு 124 குறித்து ஏற்கெனவே, 9 நீதிபதிகள் அடங்கிய 2 அமர்வுகள் விளக்கம் அளித்துள்ளன. அந்த விளக்கங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்றார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கேஹர், "முதலில் புதிய சட்டத்தை எதிர்க்கும் மனுவை 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும். தேவை ஏற்பட்டால் தகுதியின் அடிப்படையில் அந்த மனுவை விசாரிக்க பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT