Published : 31 May 2015 11:00 AM
Last Updated : 31 May 2015 11:00 AM
ஒடிசா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கிரிதர் கமாங், நேற்று கட்சியை விட்டு விலகினார்.
ஒடிசா காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்தவர் கிரிதர் கமாங். மாநில முதல்வராக பதவி வகித்தவர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 9 முறை எம்.பி.யானவர். கடந்த 43 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வந்த கமாங், நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கமாங் கூறியதாவது:
என்னுடைய ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி விட்டேன். கடந்த 1999-ம் ஆண்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. வாஜ்பாய் அரசுக்கு எதிராக நான் வாக்களித்தேன். (அப்போது ஒடிசா முதல்வராக கமாங் பதவியேற்று 2 மாதங்களாகி இருந்தன. ஆனால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) அன்றைய தினத்தில் இருந்து இப்போது வரை நான் வேதனைக்கு ஆளாக்கப்பட்டேன். என்னை காப் பாற்ற கட்சி முன்வரவில்லை.
இவ்வாறு கிரிதர் கமாங் கூறினார்.
சோனியாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘‘கனத்த இதயத்துடன், வேதனையுடன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து என் னுடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள்’’ என்று கமாங் கூறியுள்ளார்.
புதிய கட்சி தொடங்குவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. எனக்கு சொந்தமாக இசைக்குழு இருக்கிறது’’ என்றார். பழங்குடியினத்தை சேர்ந்த கிரிதர் கமாங், பாரம்பரிய இசைக்கருவியான ‘சங்கு’வை இசைப்பதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1972-ம் ஆண்டு 5-வது நாடாளுமன்ற தேர்தலில் ஒடிசாவின் கோராபுட் மக்களவை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு எம்பியானார் கமாங். அதன்பிறகு தொடர்ந்து 9 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றார். கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒடிசா முதல்வராகவும் பொறுப்பு வகித்தார் கமாங்.
இந்திரா காந்தி ஆட்சியின் போது ஓராண்டு கிரிதர் கமாங் மத்திய அமைச்சராக பதவி வகித் தார். அதன்பின், ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் தலா 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT