Last Updated : 08 May, 2015 12:41 PM

 

Published : 08 May 2015 12:41 PM
Last Updated : 08 May 2015 12:41 PM

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 3 நாள் நீட்டிப்பு: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

தங்களிடம் ஆலோசிக்காமலேயே நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நீட்டிக்கும் முடிவுக்கு எதிராக, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவை இன்று கூடியதும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமித்து குரல் எழுப்பினர்.

அதிகாரப்போக்கை சகித்துக் கொள்ள முடியாது என்றும், மோடி அரசு விளக்கம் அளித்தே ஆக வேண்டும் என்றும் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

இந்த விவகாரத்தில் மக்களவைத் தலைவர் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி நேற்று பேசிய கருத்துகளுக்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக தரப்பில் பிரச்சினை எழுப்பப்பட்டது. இதனால், கடும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

பின்னர், அவை மீண்டும் 11.30-க்கு கூடியதும் இதே பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கூட்டத் தொடரை நீட்டிப்பது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x