Last Updated : 03 May, 2015 02:08 PM

 

Published : 03 May 2015 02:08 PM
Last Updated : 03 May 2015 02:08 PM

காங்கிரஸுடன் கூட்டு சேர தயார்; ஆனால் நாடாளுமன்றத்துக்குள் மட்டும்: யெச்சூரி

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தயாராக இருக்கிறது. ஆனால், அது நிலச் சட்ட எதிர்ப்பு, மதச்சார்பின்மை போன்ற மக்கள் நலன் பேணும் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காக மட்டுமே நடக்கும் என சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தயாராக இருக்கிறது.

ஆனால், அது நிலச் சட்ட எதிர்ப்பு, மதச்சார்பின்மை போன்ற மக்கள் நலன் பேணும் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காக மட்டுமே நடக்கும். காங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லை.

ஏனெனில், காங்கிரஸ் கட்சி நம்பகத்தன்மையற்றது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு தேசிய அடையாளம் கொண்ட கட்சி. எங்கள் கட்சி பல்வேறு மாநிலங்களிலும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் இப்போதைக்கு தேசிய அளவிளான கூட்டணி ஏற்படுத்த மாநில அளவில் ஒத்துழைப்பு இருக்குமா என்பது தெரியவில்லை.

தேசிய அளவில் அப்படி ஒரு கூட்டணி உருவாக்க வேண்டும் என்றால், அது கொள்கை ரீதியாக நிறைய மாற்றுக் கருத்துகளை கொண்டிருக்கும். எனவே, இப்போதைக்கு அப்படி ஒரு கூட்டணிக்கு வாய்ப்பில்லை" என்றார்.

அண்மையில், நிலச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் நடந்த பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த யெச்சூரி, "பிஹார் தேர்தல், பாஜகவுக்கு மிகப் பெரிய சவால். ஜனதா பரிவார் இணைப்பு பாஜகவுக்கு வலுவான மாற்றாக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x