Published : 22 May 2015 07:04 AM
Last Updated : 22 May 2015 07:04 AM
ஹைதராபாத்தில் காச நோயாளிகளுக்காக அடுத்த மாதம் 8-ம் தேதியிலிருந்து ‘மீன் பிரசாதம்’ வழங்கப்படும் என்று பத்தினி-மிருகசீரிஷ அறக் கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த அறக்கட்டளையின் செயலாளர் பத்தினி ஹரிநாத் கவுட் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
எங்கள் அறக்கட்டளை மூலம் காச நோயாளிகளுக்காக ஆண்டுதோறும் ‘மீன் பிரசாதம்’ வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஜூன் மாதம் 8-ம் தேதியிலிருந்து 3 நாட்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள நாம்பல்லி மைதானத்தில் மீன் பிரசாதம் வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மற்றும் உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்மா ரெட்டி ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.இதையடுத்து ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர், போலீஸ், வருவாய், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 3 குவிண்டால் மீன் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதன் மூலம் 3.5 லட்சம் பேர் பயனடைந்தனர். இந்த முறை 3.5 குவிண்டால் மீன் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கவுட் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT