Published : 30 May 2015 09:22 AM
Last Updated : 30 May 2015 09:22 AM

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாக 74 தமிழக தொழிலாளர்கள் கைது

செம்மரங்களை வெட்ட வந்ததாக, தமிழகத்தின் வேலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 74 தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மாதம் 7-ம் தேதி செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர மாநில அதிரடி போலீஸ் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க ஆந்திர ஐ.ஜி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு நியமித்தது.

தவிர, ஆந்திர உயர் நீதிமன்ற மும், தேசிய மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சின்ன மாண்டியம் என்ற இடத்தில் நேற்று காலை போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் இருந்து வந்த சுற்றுலா பஸ்ஸை சோதனையிட்டபோது அதிலிருந்த 74 தமிழர்களை கடப்பா போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து கடப்பா போலீஸார் நேற்று கூறும்போது, “இவர்களிடம் ரம்பம், கோடாரி, கத்தி போன்ற ஆயுதங்களும் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் போன்ற சமையல் பொருட்களும் இருந்தன. விசாரணையில் இவர்கள் சுற்றுலாப் பயணிகள் போன்று செம்மரம் வெட்ட வந்தவர்கள் எனத் தெரியவந்தது. இவர்களை கைது செய்து, ஆயுதங்களையும் சமையல் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் அனைவரும் சேலம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x