Last Updated : 15 May, 2015 03:12 PM

 

Published : 15 May 2015 03:12 PM
Last Updated : 15 May 2015 03:12 PM

மசோதாக்களுக்கு எதிரான மாநிலங்களவை; ஜனநாயகத்துக்கு பெரும் சவால்: அருண் ஜேட்லி

நேரடியாகத் தேர்வு செய்யப்படாத மாநிலங்களவை உறுப்பினர்கள் முக்கிய மசோதாக்களுக்கு தடை ஏற்படுத்துவது இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பெரிய சவால் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா அறிமுகப்படுத்தும் சட்ட மசோதாக்கள், நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ராஜ்யசபா உறுப்பினர்களால் மீண்டும் மீண்டும் தோல்வியடைவது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் மிகப்பெரிய சவால் என்று அருண் ஜேட்லி கூறினார்.

இத்தகைய சூழ்நிலைகளில், நிதி மசோதாக்களை அமல்படுத்த அரசியல் சட்டப்பிரிவு 110-தான் தீர்வு என்று கூறுகிறார் அருண் ஜேட்லி. அதாவது மாநிலங்களவையின் ஒப்புதல் என்பதை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு பற்றி, தி இந்து (ஆங்கிலம்) அவரிடம் கேள்வி எழுப்பிய போது,

"மாநிலங்களவை உறுப்பினர்கள் இத்தகைய கேள்விகளை கேட்கின்றனர். ஆனால், அரசியல் சாசனப்பிரிவு 110-ஐ நான் அவர்களுக்குப் படித்துக் காட்டும் போது அவர்களிடம் பதில் இல்லை. வரிவிதிப்பு, செலவுகள், செலவினங்களைக் குறைப்பது ஆகியவை நிதிமசோதாக்களாகும். அவர்களுக்கு எனது சட்டபூர்வ, அரசியல் சாசனபூர்வ பதில் இதுதான்.

நாட்டின் வளர்ச்சியை இத்தகைய தடைகள் மூலம் மந்தப்படுத்த அவர்கள் நினைப்பது தவறு, ஆனால் அவர்களால் அது முடியவில்லை என்பதும் உண்மைதான்” என்று கூறினார் அருண் ஜேட்லி.

ஒரு மசோதா நிதி மசோதாவா என்ற சிக்கல் எழுந்தால், அரசியல் சாசனப் பிரிவு 110-ன் படி, அவைத்தலைவரின் முடிவே இறுதி முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x