Last Updated : 25 Apr, 2015 07:23 AM

 

Published : 25 Apr 2015 07:23 AM
Last Updated : 25 Apr 2015 07:23 AM

விவசாயி தற்கொலை விவகாரம்: கேஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது - பாஜக, காங்கிரஸ், விவசாய சங்கங்கள் கடும் கண்டனம்

டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அந்த மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இச் சம்பவம் தொடர்பாக கேஜ்ரிவால் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால், அவரது மன்னிப்பை ஏற்க விவசாயியின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். கேஜ்ரிவாலின் விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்று பாஜக, காங்கிரஸ் மற்றும் விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் கடந்த 22-ம் தேதி பேரணி நடைபெற்றது. அப்போது ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் என்பவர் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் நடந்த பிறகும் பேரணி தொடர்ந்து நடந்தது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால் பேரணியின் நிறைவில் பேசினார். இதற்கு காங்கிரஸ், பாஜக உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மன்னிப்பு கோரினார்

இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றில் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

விவசாயி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பிறகும் பேரணியை தொடர்ந்து நடத்தி யது தவறுதான். நான் பேசியதும் தவறுதான். விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க இந்தத் தற்கொலை சம்பவத்தை ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் திசை திருப்புகின்றன.

நான் பேசியது யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் குற்றம் செய்துவிட்ட உணர்வில் இருக்கிறேன்.

இந்த விஷயத்தை அரசியலாக் காமல் தயவுசெய்து விவசாயி களின் உண்மையான பிரச்சினை களில் கவனம் செலுத்துங்கள். போலீஸார் என்னிடம் விசாரிக்க விரும்பி னால் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். இந்த விஷயத்தில் போலீஸாரை குறை கூறக் கூடாது. திடீரென விவசாயி தற்கொலை செய்து கொண்டார். சிறிது சந்தேகம் ஏற்பட்டிருந்தால்கூட அவரை போலீஸார் காப்பாற்றி இருப்பார்கள்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.

குடும்பத்தினர் ஏற்க மறுப்பு

தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜேந்திர சிங்கின் தந்தை பானி சிங் கூறும்போது, நான் எனது மகனை இழந்துவிட்டேன். கேஜ்ரிவாலின் மன்னிப்பு எனது மகனை மீட்டுத் தருமா? இருந்தாலும், ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் எங்கள் வீட்டிற்கு நேரில் வந்தது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றார்.

கஜேந்திர சிங்கின் சகோதரி ரேகா நிருபர்களிடம் கூறும்போது, கேஜ்ரிவால் இப்போது மன்னிப்பு கேட்பதாலோ அல்லது வருத்தம் தெரிவிப்பதாலோ என்ன நேரப் போகிறது. எனது சகோதரர் இந்த முடிவை எடுக்கும் அளவுக்கு அவரை தூண்டி இருக்கின்றனர். இதன் பின்னணியில் சதி உள்ளது என்றார்.

மற்றொரு நெருங்கிய உறவினர் கோபால் சிங் கூறும் போது, தற்கொலை சம்பவத்தில் சந்தேகம் உள்ளது. இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர ரதோர், விவசாயி கஜேந்திர சிங்கின் கிராமமான டவ்சா மாவட்டம், பண்டிகுயிக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் பாஜக சார்பில் ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்கும் விவசாயியின் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் ரூ.10 லட்சத்துக் கான காசோலையை வழங்கினார்.

டெல்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு கேஜ்ரிவால் மன்னிப்பு கோரி யுள்ளார். இதன்மூலம் அவர் தவறிழைத்திருப்பது உறுதி யாகியுள்ளது. விளம்பரத்துக்காக கேஜ்ரிவால் எதையும் செய் வார். அதன்விளைவுதான் இப்போதைய சோக சம்பவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கூறியதாவது: டெல்லியில் முதல்முறையாக ஆட்சி அமைத்து 49 நாட்களில் கேஜ்ரிவால் பதவி விலகினார். அதற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கோரினார். அதைத் தொடர்ந்து பல்வேறு நேரங்களில் மக்களிடம் அவர் மன்னிப்பு கோரி யுள்ளார். இப்போது விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் எத்தனை முறைதான் மன்னிப்பு கோருவார் என்பது தெரிய வில்லை. கேஜ்ரிவால் அளித் துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்று அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x