

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் நாளை (சனிக்கிழமை) முழு அடைப்பு நடைபெறுகிறது. இதற்காக கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவை திரட்டுவதில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதை தமிழக அரசும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கர்நாடக அரசை கண்டித்து கடந்த 28-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தின.
இந்நிலையில் மேகேதாட்டு திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக கன்னட சலுவளி கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வாட்டாள் நாகராஜ் நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகத்தில் உயிர்நாடியான காவிரி ஆற்றில் தமிழக அரசு தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், சிக்கபள்ளாபூர், கோலார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீராக இருக்கும் காவிரியை கர்நாடகத்திடம் இருந்து பறிக்க தமிழகம் முயற்சிக்கிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எனவே மேகேதாட்டு திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளை கண்டித்து நாளை கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படும். இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும், 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும், வர்த்தக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதே போல முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், கன்னட சலுவளி கட்சி, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே எங்களது போராட்டத்தின் காரணமாக பெங்களூரு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கர்நாடகாவும் ஸ்தம்பிக்கும். இதற்காக மாநிலம் முழுவதும் பயணித்து ஆதரவு திரட்டியுள்ளேன்'' என்றார்.