Published : 22 Mar 2015 10:27 AM
Last Updated : 22 Mar 2015 10:27 AM

உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி மீது வழக்கு: ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்

தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி கட்சிப் பிரமுகரி டம் ரூ. 1.1 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ரேணுகா சவுத்ரி (60) மீது தெலங்கானா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் புக்கா ராம்ஜி நாயக். காங்கிரஸ் கட்சி நிர்வாகியான இவர், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கம்மம் மாவட்டம் வைரா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தத் தொகுதியில் வேறொருவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலுக்கு பின்னர் புக்கா ராம்ஜி நாயக் மரணமடைந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புக்கா ராம்ஜி நாயக்கின் மனைவியான புக்கா கலாவதி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ‘சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி எனது கணவரிடம் ரேணுகா சவுத்ரியும் அவரது ஆதரவாளர்களான ராமாராவ், புல்லய்யா, சைதுலு, ரங்காரெட்டி, சுப்பா ரெட்டி, தயாகர் ரெட்டி ஆகியோரும் ரூ. 1.1 கோடி லஞ்சம் வாங்கினர். ஆனால் எனது கணவருக்கு சீட் கிடைக்கவில்லை.

இதனால் மன வேதனை அடைந்த அவர் மரணமடைந்தார். பணத்தைக் கேட்டபோது, சாதி பெயரைக் கூறி என்னை திட்டி அவமானப்படுத்தினர். இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி கம்மம் நகர போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இதன்பேரில் கடந்த 16-ம் தேதி ரேணுகா சவுத்ரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மீது போலீஸார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து ரேணுகா கூறும்போது, இது என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு. இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x