Last Updated : 13 Mar, 2015 09:43 AM

 

Published : 13 Mar 2015 09:43 AM
Last Updated : 13 Mar 2015 09:43 AM

‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்துக்கு உடனடியாக தடையை நீக்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

‘‘இந்தியாவின் மகள் ஆவணப்படத் துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க முடியாது’’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படம் வெளியிடப்பட இருந்தது. பிரிட்டனின் லெஸ்லி உட்வின் என்பவர் பிபிசி தொலை காட்சியுடன் இணைந்து இதனை தயாரித்தார். இதில், டெல்லியில் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது.

பெண்களைப் பற்றி முகேஷ் தரக்குறைவாக கூறியிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவில் ஆவணப்படத்தை ஒளிபரப்ப டெல்லி உயர் நீதிமன்றம் மார்ச் 4-ம் தேதி தடை விதித்தது. மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஆகியவையும் இந்தியாவில் ஆவணப்படத்தை ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தன.

இந்நிலையில், ஆவணப்படத் துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2 பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், ‘‘ஆவணப்படத்துக்கு தடை விதித்திருப்பது, அரசிய லமைப்பு சட்டம் 19-வது பிரிவின் படி வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறியதாகும். எனவே, உள்துறை, தகவல் ஒலிபரப்பு துறை, டெல்லி போலீஸ் ஆணை யர் ஆகியோர் விதித்துள்ள தடை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். மேலும், யூ டியூப்பில் அந்த ஆவணப்படம் வெளியாகி சுமார் 2.86 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், ஆவணப் படத்தை பார்க்க மக்கள் விரும்பு கின்றனர். எனவே, தடையை நீக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டது.

இந்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.டி.அகமது, சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்புவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எனவே, குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு முதலில் வெளிவரட்டும்.எனினும், இந்த மனுக்களை, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோகிணி தலைமையிலான அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கிறோம். இந்த மனு மார்ச் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை இந்த மனுக்கள் மீது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x