Published : 21 Mar 2015 10:12 AM
Last Updated : 21 Mar 2015 10:12 AM

ஆந்திர பேரவை நடவடிக்கைகள் மோசம்: ஒளிபரப்ப ‘ஏ’ சான்றிதழ் வாங்க வேண்டும் - காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டி குற்றச்சாட்டு

ஆந்திர மாநில பேரவை நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை. இவற்றை ஒளிபரப்ப ‘ஏ’ சான்றிதழ் வழங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரகுவீரா ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி பல்வேறு அமைப்பினர் சார்பில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரகுவீரா ரெட்டி நேற்று கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் மட்டுமல்லாது சமீபத்தில் நடந்த பேரவைக் கூட்டங்கள் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் குடும்பத்துடன் பார்க்க இயலாத வகையில் படு மோசமாக உள்ளன. ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவருக்கொருவர் ஆபாசமாக திட்டிக்கொள்கின்றனர்.

ஆந்திர பேரவை நிகழ்ச்சிகளை ஒளி பரப்ப ‘ஏ’சான்றிதழ் வழங்கும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து விரைவில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்படும். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. மாநில பிரிவினை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த காங்கிரஸ் கட்சி போராட முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x