Last Updated : 19 Mar, 2015 09:38 AM

 

Published : 19 Mar 2015 09:38 AM
Last Updated : 19 Mar 2015 09:38 AM

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் மோதல்: ஐஐடி வாரிய தலைவர் அனில் ககோட்கர் ராஜினாமா

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐஐடி (பாம்பே) நிர்வாகிகள் குழு தலைவர் பதவியை அணு விஞ்ஞானி அனில் ககோட்கர் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து ககோட்கர் கூறும்போது, “எனக்கு வேறு பணி இருப்பதால், எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார். எனினும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடனான கருத்து வேறுபாடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஐஐடி-யின் பாட்னா, புவனேஸ்வர் மற்றும் ரோபர் ஆகிய கிளைகளுக்கான இயக்குநர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெற இருந்தது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சரும் ககோட்கரும் தலைமை தாங்க இருந்தனர்.

இந்நிலையில், சில இயக்குநர்களை நியமிப்பது தொடர்பாக அமைச்சருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ககோட்கர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ககோட்கருடன் நேற்றுமுன்தினம் மாலை அமைச்சர் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இதையடுத்து தனது பதவிக்காலத்தின் எஞ்சியுள்ள மே மாதம் வரை பணியில் தொடர ககோட்கர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐஐடி-டெல்லி இயக்குநர் ஆர்.ஷெவ்கோங்கர் கடந்த ஆண்டு டிசம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும், அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்குக் காரணம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x