Published : 11 Mar 2015 10:01 AM
Last Updated : 11 Mar 2015 10:01 AM

உ.பி.யில் சிவன் கோயில் கட்டிய முஸ்லிம்

அடிக்கடி மதக்கலவரம் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக, முஸ்லிம் ஒருவர் இந்துக்களுக்காக கோயில் கட்டிக்கொடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே சஹார் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவர் அஜ்மல் அலி ஷேக், தனது கிராமத்தில் வாழும் இந்துக்களுக்காக தனது சொந்தப் பணத்தில் ரூ. 4 லட்சம் செலவிட்டு சிவன் கோயில் கட்டிக்கொடுத்துள்ளார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன் கோயில் கட்டுமானப் பணி தொடங்கியது. தற்போது இப்பணி நிறைவுற்று, அங்கு சிவன் மற்றும் அனுமன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அஜ்மல் அலி ஷேக் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இருமதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழும் இக்கிராமத்தில் இந்துக்களுக்கு கோயில் இல்லை என்ற குறை இருந்தது. இதற்காக, சில கி.மீ. தொலைவிலுள்ள கிராமத்துக்குச் சென்று வழிபட்டு வந்தனர். எனவே இக்கோயிலைக் கட்ட முடிவெடுத்தேன்” என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் சிறு காரணங்களுக்காகக் கூட அடிக்கடி மதக் கலவரம் நடைபெறுவது வழக்கம். இந்த சூழலில் மதுரா அருகே இந்துக்களுக்காக அலி ஷேக் கட்டிக் கொடுத்திருக்கும் கோயில் மத நல்லிணக்கத்துக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x