Published : 20 Feb 2015 09:22 AM
Last Updated : 20 Feb 2015 09:22 AM

ராமா நாயுடு உடல் அரசு மரியாதையுடன் தகனம்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் உடல் நேற்று ஹைதராபாத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ராமா நாயுடு ஸ்டுடியோவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது.

பிரபல திரைப்பட தயாரிப் பாளர் டி. ராமா நாயுடு (78) கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு, நேற்று முன் தினம் மதியம் ஹைதராபாத்தில் காலமானார். நேற்று அவரது உடல் வீட்டிலிருந்து, அவரின் சொந்த சினிமா ஸ்டுடியோவான ராமா நாயுடு ஸ்டுடியோ வரை இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

இதில் ஏராளமான சினிமா கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இவரது உடலுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மதியம் 4 மணியளவில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது 3 சுற்றுகள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீஸார் மரியாதை செலுத்தினர். பின்னர் இவரது சிதைக்கு மூத்த மகன் சுரேஷ் தீ மூட்டினார்.

டி. ராமாராவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. திரையரங் கங்களும் மூடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x