Published : 15 Feb 2015 09:38 AM
Last Updated : 15 Feb 2015 09:38 AM
ராஜஸ்தானில் கடந்த 2 நாட்களில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இம்மாநிலத்தில் இந்நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலுக்கு இம்மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 7 பேர் இறந்தனர். இந்நிலையில் ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் 3 பேர், ஜோத்பூர் அரசு மருத்துவ மனையில் இருவர் என நேற்று 5 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மருத்துவ மற்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் பி.கே.மீனா நேற்று கூறும் போது, “இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டவர்களில் 1881 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 142 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
மாநிலத்தில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 23 பேர் இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆஜ்மீரில் 22, பார்மர், ஜோத்பூரில் தலா 13 பேர் இறந்துள்ளனர்” என்றார்.
உத்தராகண்ட் மாநிலத்திலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டேராடூன் நகரில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 வயது நபர் ஒருவரை கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார்.
இம்மாநிலத்தில் இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலுக்கு பலியான 2-வது நபர் இவர் ஆவார். இதற்கு முன்பு ஹரித்துவார் மாவட்டத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT