Published : 09 Feb 2015 10:58 AM
Last Updated : 09 Feb 2015 10:58 AM
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகளை கட்டுவதற்கு வரும் கோடை விடுமுறையை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கி உள்ளார்.புதிதாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் கவுன்சில் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க முதல்வர்களை உள்ளடக்கிய துணைக் குழு அமைக்கப்படும். இதன் உறுப்பினர்கள் பின்னர் அறிவிக்கப்படுவர். தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய அமைப்பு ரீதியான நடவடிக்கைகள், தொழில்நுட்ப ரீதியான தகவல்கள், இதை வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்வது உள்ளிட்டவை குறித்து இந்தக் குழு ஆலோசனை வழங்கும். இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறைகளைக் கட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்காக, அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளைக் கட்டுவதற்கு, மாநில அரசுகள் வரும் கோடை விடுமுறையை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வரும் 2019-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் ஒரு பகுதியை பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
66 திட்டங்கள் மறு ஆய்வு
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 66 திட்டங்களை மறு ஆய்வு செய்ய மாநில முதல்வர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும். எந்தெந்த திட்டங்களைத் தொடரலாம், எதைக் கைவிடலாம், எதை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கலாம் என்பது குறித்து இந்தக் குழு ஆலோசனை வழங்கும்.
மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு பதிலாக, குறிப்பிட்ட திட்டத்தையும் மாநிலங்களின் தேவையையும் ஒப்பிட்டுப் பார்த்து அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் முறைக்கு நாம் மாற வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
147 ஆக இருந்த மத்திய அரசின் திட்டங்கள் கடந்த ஆண்டு 66 ஆகக் குறைக்கப்பட்டது. இதை 10 ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம், மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்ப வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற போதுமான நிதி கிடைக்கும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT