Published : 16 Feb 2015 12:47 PM
Last Updated : 16 Feb 2015 12:47 PM
பிஹார் முதல்வர் மாஞ்சிக்கு ஆதரவு அளித்து பாவத்தில் ஈடுபடும் பாஜகவின் செயல், அரசியலில் நிகழ்ந்த கறுப்பு சகாப்தமாக எதிர்காலத்தில் பார்க்கப்படும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனா தனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், "வளர்ச்சி பணிகள் தொடங்க கமிஷன் பெற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்ட நபருக்கு பாஜக ஆதரவு அளித்து வருகிறது.
கமிஷன் வாங்கியதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஒருவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருவது பாவமான செயல். அவர் வெற்றி பெற பாஜக ஆதரவாக செயல்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
நிதிஷ் குமாருக்கு 130 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனாலும் பாஜக மாஞ்சிக்கு ஆதரவாக நடந்து வருகிறது. நிதிஷ் குமாருக்கு எதிராக மாஞ்சியை தூண்டிவிடுகிறது.
பிஹார் அரசியலில் தற்போது உள்ள நிலவரத்தை யாரும் நியாயப்படுத்திவிட முடியாது. எதிர்காலத்தில் இந்தச் செயல் தேசிய அளவிலான அரசியலில் நிகழ்ந்த கறுப்பு சகாப்தமாகவே பார்க்கப்படும்" என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.
வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும்போது, சில சமயம் எனக்கும் `கமிஷன்' கிடைக்கிறது என்று ஒரு நிகழ்ச்சியில் பிஹார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து `கமிஷன்' பெற்றதைத் தானே ஒப்புக்கொண்டதால் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், "முதல்வர் போன்ற உயர் பதவிகளுக்கும் கூட எப்படி லஞ்சம் வருகிறது என்பதை குறியீடாகச் சுட்டிக்காட்டவே அவ்வாறு தான் கூறியதாகவும் மாஞ்சி விளக்கம் அளித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT