Published : 03 Feb 2015 08:47 AM
Last Updated : 03 Feb 2015 08:47 AM

கேந்திரிய வித்யாலயா பள்ளி லாக்கரில் ரூ.1 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம்: ஆசிரியர்களின் அறையை சுத்தம் செய்தபோது கண்டுபிடிப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஊழியர்களின் பயன்படுத்தப்படாத லாக்கரில் ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சந்த்கேதா காவல் நிலைய ஆய்வாளர் கேகே தேசாய் கூறியதாவது:

அகமதாபாத் நகரில் சந்த்கேதா பகுதியில் ஓஎன்ஜிசி வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முதல்வர் அவதேஷ் குமார் தலைமையில் கடந்த சனிக்கிழமை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஆசிரியர்களின் அறையை சுத்தம் செய்தபோது, பயன்படுத்தப்படாத தூசு படிந்த நிலையில் பல அடுக்கு லாக்கர் ஒன்று இருந்ததை கண்டறிந்துள்ளார்.

அந்த லாக்கர்களை திறந்து சுத்தம் செய்யுமாறு ஊழியர்களை முதல்வர் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மொத்தம் 20 லாக்கர்கள் இருந்த நிலையில், 5 லாக்கர்களின் சாவி கிடைக்க வில்லை. இதையடுத்து அந்த லாக்கர்கள் உடைக்கப்பட்டன. அதில் 2 லாக்கர்களில் தலா ஒரு பை இருந்துள்ளது.

ஒரு பையில் ரூ.1 கோடி ரொக்கமும் மற்றொரு பையில் தலா 100 கிராம் எடை கொண்ட 21 தங்கக் கட்டிகளும் இருந்துள்ளன. இதற்கு ஊழியர்கள் யாரும் உரிமை கோரவில்லை இதனால் இதுகுறித்து எங்களுக்கு பள்ளி முதல்வர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரூ.1.59 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கத்தை கைப்பற்றி உள்ளோம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்ததா கவும், அதன்பிறகு இந்த லாக்கர்கள் திறக்கப்படவில்லை என்றும் பள்ளி முதல்வர் தெரிவித்தார். ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியதில் யாரும் இதற்கு உரிமை கோரவில்லை. எனவே, இதுகுறித்து வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x