

காந்திநகர்: குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள வார்தெஜ் நகரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள வயல்வெளியில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாகனம் வந்தது. அதில் இருந்து 3 பேர் இறங்கினர்.
இதை பார்த்ததும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நபர்கள் போலீஸ் ரெய்டு வந்திருப்பதாக நினைத்து பதறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இருள் சூழ்ந்து இருந்ததால் கிணறு இருப்பது தெரியாமல் அதற்குள் 4 பேர் தவறி விழுந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் எப்படியோ போராடி வெளியே வந்துவிட்டார்.
மற்ற 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் 3 பேர் பிணமாக கிடப்பது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் அவர்களின் உடல்களை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், இறந்தவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் திரண்ட அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் ரெய்டு வந்ததாலேயே இந்த சம்பவம் நடந்ததாகவும், 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, வாகனத்தில் வந்த 3 நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.