Published : 19 Jan 2015 09:20 AM
Last Updated : 19 Jan 2015 09:20 AM

101 ஆறுகளை நீர்வழித் தடங்களாக மாற்ற அரசு திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

நாடு முழுவதும் 101 ஆறுகளை போக்குவரத்துக்கான நீர்வழித் தடங்களாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் நேற்று கூறியதாவது: நீர்வழித் தடங்களை மேம்படுத்துவதே எனது அமைச்சகத்தின் மிகமிக முக்கியப் பணியாக இருக்கும். நீர்வழித் தடங்களாக மாற்றுவதற்கு நாடு முழுவதும் 101 ஆறுகளை அடையாளம் கண்டுள்ளோம்.

எந்தவொரு ஆற்றையும் நீர்வழித் தடமாக மாற்ற, அது தொடர்பான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். இதுவரை 5 ஆறுகளை நீர்வழித் தடமாக அரசு அறிவித்துள்ளது.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்தைவிட நீர்வழிப் போக்குவரத்து சிக்கனமானது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியது. என்றாலும் இதன் சாதகங்களை நாம் இதுவரை பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனவே இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நீர்வழிப் போக்குவரத்துக்கு கி.மீட்டருக்கு 50 பைசா செலவாகிறது. இதுவே ரயில் போக்குவரத்துக்கு ரூ.1-ம் சாலைப் போக்குவரத்துக்கு ரூ.1.50ம் செலவாகிறது. எனவே போக்குவரத்து செலவை குறைக்க எனது அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள் என நாடு முழுவதும் 14,500 கி.மீ. தொலைவுக்கு உள்நாட்டு நீர்வழித் தடம் உள்ளது. என்றாலும் இவற்றை முழுவதுமாக நாம் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் உலர் மற்றும் துணை துறைமுகங்கள் ஏற்படுத்து வது, ஆறுகளை நீர்வழித் தடங்க ளாக மாற்றுவது ஆகிய பணி களுடன் ‘பிரதமர் ஜல் மார்க் யோஜனா’ என்ற திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒடிஸாவின் பாரதீப் துறைமுகம் தம்ரா துறைமுகம் இடையே 5-வது தேசிய நீர்வழித்தடம் அமைக்க ஒடிஸா அரசுடன் இந்திய உள்நாட்டு நீர்வழித்தட ஆணையம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டது.

மேலும் சோழிங்கநல்லூர் கல் பாக்கம் இடையே தெற்கு பக்கிங் ஹாம் கால்வாயை மேம்படுத்தும் ‘தேசிய நீர்வழித் தடம் 4’-க்கு அனுமதி தரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x