Published : 20 Jan 2015 08:25 AM
Last Updated : 20 Jan 2015 08:25 AM
பிஹார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டத்தில் காதல் பிரச்சினை யால் ஒரு இளைஞர் கடத்திக் கொல்லப்பட்டதையடுத்து, ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டனர். இதுதொடர்பாக 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள அஜிஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பக்கத்து கிராமத்தின் வேற்று மதத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் காதலித்துள்ளார். கடந்த 9-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை.
இந்நிலையில், கிராமத்துக்கு அருகே அவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப் பட்டது. காதல் பிரச்சினையால் அவர் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
இதையடுத்து, சுமார் 3,000 பேர் அந்த இளம்பெண்ணின் கிராமத்துக்கு சென்று அங்கிருந்த வீடுகள், வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பெரும்பாலான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகின. 3 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். பெரும்பாலானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருந்தனர்.
இதையடுத்து ஏராளமான போலீஸாருடன் மாவட்ட காவல் துறையின் மூத்த அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT