Published : 28 Jan 2015 10:39 AM
Last Updated : 28 Jan 2015 10:39 AM

வெளிநாட்டுப் பணி வாய்ப்புகள்: ஜன.31-ல் ஜோலார்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

ஜோலார்பேட்டையில் இம்மாதம் 31-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேலைநாடுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தனியார் வேலைவாய்ப்பு முகாம், ஊரகத் தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஜன.31-ம் தேதி ஜோலார்பேட்டை யில் அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அரங்கமும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இடம் பெறுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

குவைத்தில் வேலைவாய்ப்பு

குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் உள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், தொடக்கப்பள்ளி தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம் பெற்ற தொழிலாளிகள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற ரிக்கர் பணி அறிந்த தொழிலாளர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவத்துடன் 50 வயதுக்குட்பட்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 வருட அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள்.

சவுதி அரேபியாவில்..

சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவ மனைகளுக்கு 2 வருட பணி அனுபவத்துடன் 55 வயதுக்குட்பட்ட அலோபதி மருத்துவர்கள் மற்றும் பி.எஸ்சி. தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை 044 - 22502267 / 22505886 / 08220634389 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x