Published : 28 Jan 2015 09:04 AM
Last Updated : 28 Jan 2015 09:04 AM
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இடம்பெறுவதை ஆதரிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா மூன்று நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி டெல்லி வந்தார். முதல்நாளில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் பராக் ஒபாமாவும் தனியாக சந்தித்துப் பேசினர். இரண்டாவது நாளான நேற்றுமுன்தினம் டெல்லியில் நடைபெற்ற 66-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒபாமா பங்கேற்றார். மாலையில் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசினார்.
மூன்றாவது நாளான நேற்று டெல்லியில் 2000 பேர் கூடிய சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவும் அமெரிக்காவும் வெறும் நட்பு நாடுகள் மட்டுமல்ல, மிக நெருங்கிய கூட்டாளிகள். இரு நாடுகளும் கைகோத்து நின்றால் உலகம் பாதுகாப்பாக, அமைதியாக இருக்கும். ஆசிய பசிபிக் பிராந்தி யத்தில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும். இதில் எழுந்துள்ள பிரச்சி னைகளுக்கு உடனடியாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பிராந்தியத்தின் அமைதிப் பணியில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டியது அவசியம்.
சர்வதேச அளவில் பாது காப்பு, அமைதியை உறுதி செய்ய 20-ம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்ட அமைப்புகளை 21-ம் நூற் றாண்டுக்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையி்ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்தம் செய்து அதில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெற வேண்டும் என்பதை நான் முழுமன தோடு ஆதரிக்கிறேன்.
தீவிரவாதத்தினால் இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. நமது நாட்டு மக்களைப் பாதுகாத்திட நாம் இணைந்து நிற்போம். புதிய சவால்களை எதிர்கொள்ள பாது காப்பு ஒத்துழைப்பை அதிகரிப் போம். அணு ஆயுதம் இல்லாத உலகை படைப்போம். அது நம் அனைவரின் லட்சியமாக இருக்க வேண்டும்.
மதநல்லிணக்கத்தை அனைத்து தரப்பு மக்களும் உறுதியுடன் பின் பற்ற வேண்டும். இந்திய துணைக் கண்டத்தில் மதரீதியாக பிரிவினை ஏற்படக்கூடாது. நாடு ஒற்றுமையாக இருந்தால்தான் வெற்றிகள் குவியும். மத சுதந்திரத்தை பாது காக்கும் பொறுப்பு அரசுக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது.
பன்முகத்தன்மைதான் நமது பலம். பிரிவினை சக்திகளை முறிய டிப்பதில் இந்தியாவும் அமெரிக் காவும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். உலகில் கிறிஸ் தவம், இஸ்லாம், பவுத்தம், இந்து என ஏராளமான மதங்கள் உள்ளன. இந்த மதங்கள் அனைத்தும் உலகம் என்ற ஒரே தோட்டத்தில் மலர்ந்த மலர்கள். மனிதர்களில் நிறம், இனம், மதம் என எவ்வித பாகுபாடும் பார்க்கக்கூடாது. மனித உரிமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
எனது ஆரம்பகால வாழ்க்கை யில் தோல் நிறத்தினால் சில மோச மான அனுபவங்கள் நேரிட்டுள்ளன. அதையெல்லாம் தாண்டி அதிபராக உயர்ந்துள்ளேன். நாம் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி போன்ற மாபெரும் தலைவர்கள்தான் காரணம். இந்தியாவின் பல்வேறு திட்டங்களில் அமெரிக்கா ரூ.24,000 கோடி முதலீடு செய்யும். சிறு, நடுத்தர தொழில்கள், மரபுசாரா எரிசக்தி துறைகளில் இந்த முதலீடு செய்யப்படும்.
இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
பின்னர் நேற்று பிற்பகலில் ஒபாமா சவுதி அரேபி யாவுக்கு புறப்பட்டார். ஒபாமாவும் அவரது மனைவி மிஷெலும் விமானத்தில் ஏறிய பின்னர் இந்திய பாரம்பரியப்படி இருகரம் கூப்பி வணக்கம் கூறி விடைபெற்றனர்.
புதிய சகாப்தம் தொடக்கம்: மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், அதிபர் ஒபாமாவின் வருகையால் இந்திய, அமெரிக்க உறவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய சுற்றுப் பயணம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இதற்காக பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT