Published : 30 Dec 2014 08:51 AM
Last Updated : 30 Dec 2014 08:51 AM

நாளை ஓய்வு பெறுகிறார் கே.ராதாகிருஷ்ணன்: இஸ்ரோவின் அடுத்த தலைவர் யார்?- முறையற்ற நியமனத்தை தடுக்க வலியுறுத்தல்

இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நாளை ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அடுத்த தலைவரை நியமிப்பதற்கான பணிகள் சூடுபிடித்துள்ளன.

இதற்கிடையே இஸ்ரோவில் அனுபவமும் தகுதியும் வாய்ந்த விஞ்ஞானிகள் இருக்கும்போதே தகுதி அல்லாத விஞ்ஞானிகளை நியமிப்பதற்கான காய்நகர்த்தல்கள் நடப்பதாக மூத்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1971-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் விக்ரம் சாரா பாய் விண்வெளி மையத்தில் மின்னணு விமானவியல் (ஏவியானிக்ஸ்) பொறியாளராக பணியில் சேர்ந்தார் கே.ராதாகிருஷ்ணன். இஸ்ரோவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த இவர் அதன் தலைவராக உயர்ந்தார். இந்திய அரசின் கவுரவமிக்க பத்மபூஷண் விருது இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான், மங்கள்யான் ஆகிய சாதனைகளுக்கும் இவர் சொந்தக்காரர். டிசம்பர் 31-ம் தேதி இவர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி சூடுபிடித்துள்ளது.

இஸ்ரோவில் தற்போது ராதாகிருஷ்ணனுக்கு அடுத்த நிலையில் திருவனந்தபுரம், வலியமலாவின் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குநர் சிவன் என்பவர் இருக்கிறார்.

இவர் தமிழகத்தின் கன்னியா குமரியைச் சேர்ந்தவர். இவருக்கு அடுத்த நிலையில் தேசிய தொலை உணர் மையத்தின் (National remote sensing centre) இயக்குநர் தத்வால் இருக்கிறார். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.

ஆனால், இவர்களை தவிர்த்து தலைவர் பதவிக்கு வேறு நபர்களைத் தேர்வு செய்ய முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக பணிகள் தொடங்கிவிட்டன.

அடுத்த தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றால் சிவன், தத்வால் ஆகியோரில் ஒருவர்தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும், தற்போதைய நிலவரப்படி இஸ்ரோவில் மூத்த விஞ்ஞானி என்கிற தகுதியும் ஏராளமான சாதனைகள் புரிந்தவருமாக சிவன் மட்டுமே இருக்கிறார். 57 வயதான சிவன் கடந்தாண்டு மட்டும் 10 ஜி.எஸ்.எல்.வி மார்க்-2 ராக்கெட்டுகளின் திட்ட இயக்குநராக இருந்து விண்ணில் செலுத்தியிருக்கிறார். சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் கனவுத் திட்டமான ஜி.எஸ்.எல். மார்க் 3-ன் திட்ட இயக்குநராக இருந்ததும் அவர்தான். தவிர, ‘மார்க் 3’ என்ஜினை வடிவமைத்ததில் பெரும் பங்கு வகித்தவரும் அவர்தான். இஸ்ரோவின் சாதனைத் திட்டங்களான சந்திரயான், மங்கள்யான் ஆகியவற்றிலும் இவரது பங்களிப்பு இருக்கிறது.

ஆனால் இவர்களை தவிர்த்து விட்டு, கேரளாவைச் சேர்ந்த இருவரின் பெயர்களை தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கும் பணிகள் நடப்பதாக அறிகிறோம். அந்த இருவருமே சிவனின் பதவிக்கு கீழே இருப்பவர்கள்தான். சாதனைகள் என்று எடுத்துக்கொண்டால் அந்த இருவரையும்விட சிவனின் சாதனைகள்தான் அதிகம். இஸ்ரோவின் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்புக்கு 15 ஆண்டுகள் கால தாமதம் ஆக காரணம் என்கிற சர்ச்சையும் அதில் ஒருவர் மீது உள்ளது.

ஆனால், கேரளாவைச் சேர்ந்தவர்தான் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்த இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று தெரிகிறது. இஸ்ரோவின் தலைவர் பதவி என்பது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. மிகவும் முக்கியம் வாய்ந்தது. எனவே இதில் பாகுபாடு இல்லாமல் ஒருவர் செய்த சாதனைகளுக்கும் அனுபவத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து அந்த பதவியை நியமனம் செய்ய வேண்டும்” என்றார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x