Published : 08 Dec 2014 10:37 AM
Last Updated : 08 Dec 2014 10:37 AM
பிரதமர் நரேந்திர மோடி அளித்த யோசனையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை விரைவில் அறிவிக்கவுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: உலக யோகா தினத்தை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு மோடி கோரிக்கை விடுத்தார். அவரின் இக்கோரிக்கைக்கு 170 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மோடியின் கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் 4 நாட்களில் வெளியாக உள்ளது.
உடல் நலத்தையும், மன நலத்தையும் பெற யோகாசனங்கள் உதவுகின்றன. இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலக யோகா தினத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் இக்கோரிக்கைக்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஹெர்மன் வான் ராம்பயும், இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
யோகாவுக்கு மோடி தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, யோகாசனம், பாரம்பரிய மருத்துவத்துக்கென தனியாக ஒரு அமைச்சரவையை ‘ஆயுஷ்’ என்ற பெயரில் மோடி உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT