Published : 15 Dec 2014 10:44 AM
Last Updated : 15 Dec 2014 10:44 AM
வரலாற்றின் பக்கங்களில் மட்டுமே குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கவேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற இந்தியரான, கைலாஷ் சத்யார்த்தி (60) விருப்பம் தெரிவித்தார்.
2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நார்வேயில் இருந்து நேற்று அதிகாலை நாடு திரும்பினார். இதையடுத்து அவர் தனது மனைவி சுமேதாவுடன் டெல்லியில் மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான, நிலுவையில் உள்ள மசோதா விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதா நிறைவேற உதவும்படி அனைத்து எம்.பி.க்கள் மற்றும் தலைவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இதை நிறைவேற்றத் தவறினால் வரலாறும் இந்தியக் குழந்தைகளும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள். வாய்மை, அஹிம்சை மற்றும் அமைதியை மக்கள் இயக்கமாக காந்திஜி மாற்றினார். இரக்க உணர்வை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்பதே எனது விருப்பம். இரக்க உணர்வை நாம் உலகமயமாக்குவோம்” என்றார்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளில் தீவிரப் பற்றுடைய சத்யார்த்தி, நோபல் பரிசு பெற்ற அனுபவம் பற்றி கூறும்போது, “விழா மேடையில் இருந்த ஒவ்வொரு வினாடியும் மகாத்மா காந்திதான் என் நினைவில் இருந்தார். அவருடன் இணைந்து சென்று விருதை பெறுவது போலவே நான் உணர்ந்தேன்” என்றார்.
பரிசுத் தொகை பற்றி அவர் கூறும்போது, “இத்தகைய பெரிய தொகையை இதுவரை வாழ்க்கையில் நான் கண்டதில்லை. இதில் உள்ள ஒவ்வொரு பைசாவையும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள குழந்தைகளின் நலனுக்காக செலவிடுவேன்” என்றார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசப்சாயுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை சத்யார்த்தி பெற்றார்.
இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்த கேள்விக்கு சத்யார்த்தி பதில் அளிக்கும்போது, “இதுபற்றி கருத்து கூற நான் அரசியல்வாதி இல்லை. என்றாலும் இவ்விரு நாடுகளிடையே நிலையான அமைதிக்கு, இரு நாட்டு மக்கள் இடையிலான தொடர்பும், பரஸ்பர ஒத்துழைப்பும் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது கருத்து” என்றார்.
”இந்த விருது எனது பொறுப்புகளை அதிகரித்துள்ளது. நாட்டின் கடைசி குழந்தை தொழிலாளர் மீட்கப்படும் வரை எனது பணி முற்று பெறாது” என்றும் அவர் கூறினார்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சத்யார்த்தி, போலீஸ் அதிகாரியின் மகன் ஆவார். தனது பொறியாளர் பணியை விட்டு, குழந்தைத் தொழிலாளர் மீட்புப் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டபோது குடும்பத்தினரும் நண்பர்களும் தன்னை ஏளனம் செய்து பேசியதை அவர் வருத்தத்துடன் நினைவுகூர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT