Published : 20 Dec 2014 07:05 PM
Last Updated : 20 Dec 2014 07:05 PM
நியாயமாக நிலுவையில் உள்ள வரித்தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நியாயமற்ற முறையில் சுமத்தப்பட்ட வரிகளின் மீது கவனம் செலுத்துவதில் அர்த்தமில்லை, அது ‘கெட்ட பெயரை’ ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க வேண்டும், வலுக்கட்டாயமாக கூட வசூலிக்கலாம், ஆனால் நாம் சட்டத்தின் விதிகளுக்குட்பட்ட ஒரு சமூகம். ஆகவே செலுத்த வேண்டிய தேவையில்லாத வரிகள், மற்றும் நியாயமற்ற முறையில் சுமத்தப்பட்ட வரிகள் எப்போதும் வருவாய்க்கு வித்திடாது:” என்றார் அவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வரித்திருத்தங்கள் பற்றி ஜேட்லி கூறும்போது, “அந்த வரிகளைப் பொறுத்தவரை அந்த பணம் எத்தகையது, அதாவது அதன் நிறம் என்ன (கருப்பா வெள்ளையா என்பதை சூசகமாக குறிப்பிடுகிறார்) என்பதை என்னால் அறுதியிட முடியவில்லை. ஏனெனில் நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது. ஆனால் இந்த நடைமுறையில் நமக்கு கெட்ட பெயர் கிடைத்ததுதான் மீதம்” என்றார்.
நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறையை 4.1%ஆக மட்டுப்படுத்தும் சவால் இந்த அரசுக்கு உள்ளது என்பதையும் ஜேட்லி தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் திருப்பிக் கொடுக்க வேண்டிய வரிப்பணத்தை கொடுத்தாக வேண்டும், கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டின் மானியத் தொகைகளையும் கொடுக்க வேண்டும். 2010 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான மத்திய விற்பனை வரி இழப்பீடு தொகையும் கொடுக்கப்பட்டாக வேண்டும். இவ்வளவு நெருக்கடிகள் இருந்தும் நிதிப்பற்றாக்குறையை நான் 4.1%ஆக மட்டுப்படுத்த வேண்டும்” என்றார் அருண் ஜேட்லி.
இந்த ஆண்டு மத்தியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகளின் படி, வருவாயைக் கொண்டு பட்ஜெட்டை மதிப்பீடு செய்தால் நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறை இலக்கு சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.
நிதிநிலை அறிக்கையில் ரூ.1.05 லட்சம் கோடிக்கான தொகை அதிகமாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதுதான் இப்போது குறைபாடாகி பெரிதாக முன்னே நிற்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT