Last Updated : 27 Dec, 2014 10:26 AM

 

Published : 27 Dec 2014 10:26 AM
Last Updated : 27 Dec 2014 10:26 AM

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் ஜெ. வழக்கின் மேல்முறையீட்டில் பவானி சிங் ஆஜராகக் கூடாது: கர்நாடக அரசுக்கு திமுக கடிதம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வரையும் குற்றவாளி என அறிவித்து, 4 ஆண்டு தண்டனை விதித்தது. கடந்த அக்டோபர் 17-ம் தேதி நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜெயலலிதா மீதான‌ சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வை ஏற்படுத்துதல், நீதிபதி நியமித்தல், விசாரணை முறைகள் குறித்த வழிகாட்டுதலை நிறைவேற்றுமாறு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது.

கடந்த 20-ம் தேதியில் இருந்து ஜனவரி 4-ம் தேதி வரை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை காலம். எனவே சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீடு குறித்து எந்த அறிவிப்பையும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிடவில்லை. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் தொடர்வார் என கர்நாடக அரசு ஆணை பிறப்பித்ததால் அவர் குறித்து உச்ச நீதிமன்றம் எத்தகைய வழிகாட்டுதலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விரைவில் தொடங்க இருக்கும் ஜெயலலிதா மீதான வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடித‌ம் எழுதியுள்ளார்.

திமுக கடிதம்

கர்நாடக அரசின் தலைமை செயல ருக்கு அன்பழகன் 22 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் நகல் களை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், நீதிமன்ற பதி வாளருக்கும், தலைமை வழக்கறிஞ ருக்கும், கர்நாடக அரசின் சட்ட ஆலோசகருக்கும் அனுப்பியுள்ளார்.

அன்பழகன் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய பி.வி.ஆச்சார்யாவுக்கு நெருக்கடி கொடுத்ததால் அவர் பதவி விலகினார்.இதனைத் தொடர்ந்து பவானிசிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பவானி சிங் தனது பணி காலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கை நீதியை நிலைநாட்டும் வகையில் முறையாக நடத்தவில்லை.

பவானி சிங் பல நேரங்களில் குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதை கர்நாடக உயர் நீதிமன்றமும், பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றமும் தெரிவித் துள்ளன. குற்றவாளி தரப்பு அரசு தரப்பு சாட்சியங்களை மறுவிசாரணை நடத்திய போது பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் வழக்கை இழுத்தடிக்க‌, வழக்கு முடியும் தருவா யில், இறந்துபோன பாஸ்கரன் என்கிற சாட்சியை மறுவிசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

வழக்கின் விசாரணையை ஜெய லலிதா தரப்பு தாமதப்படுத்த முயன்ற போதெல்லாம் அரசு வழக்கறிஞர் பவானிசிங் உறுதுணையாக இருந்தார்.மேலும் வழக்கின் இறுதிவாதத்தை தொடங்காமல் உடல்நிலையை காரணம் காட்டி தாமதம் செய்தார். இதனால் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அவருக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இறுதிவாதத்தின் போது பவானி சிங் அரசு தரப்பு வாதத்தை முழுமை யாக முன்வைக்கவில்லை. அவரது உதவியாளர் முருகேஷ் எஸ்.மரடி தான் முழுமையாக வாதிட்டார். இதனால் வழக்கின் மூன்றாம் தரப்பான எங்கள் தரப்பில் 430 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தோம். மேலும் க‌ர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெய லலிதா ஜாமீன் கோரியபோது, பவானி சிங் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

புதிய வழக்கறிஞர் வேண்டும்

பவானிசிங் அரசு வழக்கறிஞராக தொடர்ந்தால் வழக்கில் நேர்மையாக நடந்துகொள்வது என்பது சந்தேகத் துக்கு இடமாகிவிடும். எனவே வேறு வழக்கறிஞரை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும்.

இதே நேரத்தில் பவானிசிங் தனது உடல்நிலை குறித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய் துள்ள விவரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். உடல்ரீதியாக‌ மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பவானி சிங் போன்றவர்களால் அரசு வழக்கறிஞர் பணியை நிறைவேற்றுவது கடினமா னது. எனவே ஜெயலலிதா மீதான வழக்கின் மேல்முறையீட்டில் பவானிசிங் தொடரக்கூடாது என அதில் கூறப்ப‌ட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜரான நாளில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என உச்ச நீதிமன்றத் தில் அன்பழகன் முறையிட்ட போது, கர்நாடக அரசு அவரை நீக்கியது. அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தனக்கு எதிராக பவானி சிங் வாதிட வேண்டும் என கேட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் சிறப்பாக செயல்படவில்லை என நீதிபதி டி'குன்ஹா தீர்ப்பில் குறிப்பிட் டதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்போது அன்பழகன் தரப்பில் கர்நாடக அரசுக்கும்,தலைமை நீதிபதிக்கும் புகார் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x