Last Updated : 15 Dec, 2014 02:38 PM

 

Published : 15 Dec 2014 02:38 PM
Last Updated : 15 Dec 2014 02:38 PM

கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகளை திறக்க உத்தரவா? - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுப்பு

கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகளைத் திறந்துவைக்குமாறு மத்திய அரசு கூறியுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி வரும் 25-ம் தேதி நல்லாட்சி நிர்வாக நாள் கடைப்பிடிக்கப்படும் என்றும், அது தொடர்பான கட்டுரைப் போட்டிகளில் மத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதோடு, நல்லாட்சி நிர்வாகம் தொடர்பான ஆவணப் படங்களை பள்ளிகளில் திரையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தின்போது மத்திய அரசின் கீழ் செயல்படும் நவோதயா பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளிலும் நல்லாட்சி நிர்வாக தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது கிறிஸ்தவர்களின் மத உரிமையை பறிக்கும் செயலாகும். இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானி மறுப்பு

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, "கிறிஸ்துமஸ் தினத்தின்போது பள்ளிகள் செயல்படும் என்ற தகவல் தவறானது. மீடியாக்கள் செய்தியை திரித்து வெளியிட்டுள்ளன. 25ம் தேதி அன்று வழக்கம்போல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி நிர்வாகம் தொடர்பான கட்டுரைப்போட்டி ஆன்-லைனில் நடத்தப்படும். விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் அதில் பங்கேற்கலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x