

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 26 பேர் நேற்று சரணடைந்தனர்.
இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) கிரண் சவான் கூறியதாவது: "சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஏழு பெண்கள் உட்பட 26 பேர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆயுதங்களை ஒப்படைத்து இன்று (புதன்கிழமை) சரணடைந்தனர். இதில், 13 பேரின் தலைக்கு மொத்தம் ரூ.65 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் ‘‘பூனா மார்கம்’’ (புனர்வாழ்விலிருந்து சமூக மறு ஒருங்கிணைப்பு வரை) முன்முயற்சியின் கீழ் இந்த 26 மாவோயிஸ்ட்களும் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தின் (பிஎல்ஜிஏ) தெற்கு பஸ்தர் பிரிவு, மாட் பிரிவு மற்றும் ஆந்திரா-ஒடிசா எல்லை பிரிவு ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர்கள். மேலும், அபுஜ்மாத், சுக்மா மற்றும் ஒடிசாவின் அருகிலுள்ள பகுதிகளில் நடந்த பல வன்முறை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்புள்ளது.
ரூ.10 லட்சம் வெகுமதி: இதில், லாலி என்ற முச்சகி ஆய்தே லக்மு (35) என்ற மாவோயிஸ்ட் குழு உறுப்பினரின் தலைக்கு மட்டும் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இவர், கடந்த 2017-ம் ஆண்டில் ஒடிசாவின் கோராபுட் சாலையில் நடந்த கண்ணி வெடி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.
அந்த தாக்குதலில் 14 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், மாநில அரசின் புனர்வாழ்வு கொள்கையால் ஈர்க்ப்பட்டு தாங்கள் சரணடையும் முடிவுக்கு வந்ததாக மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிரண் சவான் கூறினார்.