

ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடத்திய சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: காலமுறை ஊதியம், மற்றும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு - அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது.
அக்கூட்டமைப்பின் அமைப்பாளர் இ.மாயமலை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் மாயமலை கூறியதாவது: சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களுக்கான சிறப்பூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.6,750 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதோடு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
அதை நம்பி நாங்களுக்கும் வாக்களித்தோம். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்களின் ஒரு கோரிக்கையைகூட அரசு நிறைவேற்றவில்லை. முதல்வர் வெளியிட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தால் எங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது.
12 லட்சம் அரசு ஊழியர்களில் முக்கால்வாசி பேர் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்தான். ஓய்வூதிய விஷயத்தில் சத்துணவு ஊழியர்களையும், அங்கன்வாடி பணியாளர்களையும் அரசு பாகுபாடுடன் நடத்துகிறது.
பிப்.3 முதல் பணி புறக்கணிப்பு: காலமுறை ஊதியம், ஓய்வூதியத்தை ரூ.6,750 ஆக உயர்த்தி வழங்குவது, பணிக்கொடை ரூ.5 லட்சம், காலியாகவுள்ள 60 ஆயிரம் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் இடங்களை நிரப்புவது, அரசு ஊழியர்களைப் போன்று 12 மாத மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.30-ம் தேதி அன்று சென்னையில் லட்சக்கணக்கான சத்துணவு பணியாளர்களும் அங்கன்வாடி ஊழியர்களையும் திரட்டி முதல்வர் அலுவலகத்தில் முறையீடு செய்வோம்.
எங்கள் கோரிக்கைகளையும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும், உயர் நீதிமன்ற - உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் நிறை வேற்றாவிட்டால் பிப்.3-ம் தேதி முதல் பணிகளைப் புறக்கணித்துவிட்டு காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திலும், தொடர் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெஸி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.