Published : 07 Dec 2014 04:52 PM
Last Updated : 07 Dec 2014 04:52 PM

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, "தென் மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்திலிருந்து வெகு தொலைவில் தற்போது உள்ளது.

இது தற்போது இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம். குறிப்பாக தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" என்றார் ரமணன்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x