

புதுடெல்லி: காவிரியில் தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். அப்போது கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்த 4 அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் தமிழக அரசின் சார்பில், "கோடை காலம் என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மே மாதத்தில் தமிழகத்துக்கு கர்நாடகா 2.5 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும். அந்த நீரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் மே மாத இறுதிக்குள் கர்நாடக அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதை ஏற்றுகொண்ட ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர், "தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்" என உத்தரவிட்டார்.