Last Updated : 05 Dec, 2014 09:15 PM

 

Published : 05 Dec 2014 09:15 PM
Last Updated : 05 Dec 2014 09:15 PM

கேந்திரிய வித்யாலயா: சம்ஸ்கிருதம் 3-வது மொழியாக இருக்கும்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்கு பதிலாக 3-வது மொழியாக சம்ஸ்கிருதம் இருக்கும். ஆனால் இந்தப் பருவத்துக்கு தேர்வு நடத்தப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு தெரிவித்தது.

கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் நடப்பு பருவத்துக்கு இடையில், சம்ஸ்கிருதம் அறிமுகம் செய்திருப்பதால் மாணவர்களின் சுமை அதிகரித்துள்ளதாக கூறி, பெற்றோர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி வாதிடும்போது, “சம்ஸ்கிருதம் மொழிப் பாடத்துக்கு இந்தப் பருவத்தில் தேர்வு நடத்தப்படாது. மாணவர்கள் ஜெர்மன் மொழியை, கூடுதல் பாடமாக நடப்பு பருவத்தில் தொடர்ந்து படிக்கலாம்” என்றார்.

இது தொடர்பாக மத்திய மனிதவளத் துறை இணை செயலாளர் சார்பில் கடிதம் ஒன்றையும் அவர் தாக்கல் செய்தார்.

இதற்கு நீதிபதி தவே, “இது நல்ல தீர்வு, ஒரு தந்தையாக இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். என்றாலும் நீதிபதிகள் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

பெற்றோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரீனா சிங், “மத்திய அரசு நிலைப்பாடு தொடர்பாக, மனுதாரர்களுடன் ஆலோசித்து பதில் அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x