Last Updated : 28 Dec, 2014 09:38 AM

 

Published : 28 Dec 2014 09:38 AM
Last Updated : 28 Dec 2014 09:38 AM

தாவூதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் மீண்டும் வலியுறுத்தல்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமை ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த 1993 மார்ச் 12-ம் தேதி மும்பையில் 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 300 பேர் உயிரிழந்தனர். 1200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனால் தாவூத் பாகிஸ்தானில் இல்லை என்று அந்த நாட்டு அரசு சாதித்து வருகிறது. அண்மையில் தொழில்ரீதியாக துபாயை சேர்ந்த ஒருவருடன் தாவூத் தொலைபேசியில் பேசியதை ஐரோப்பிய உளவு நிறுவனம் வழிமறித்துக் கேட்டது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து தாவூத் பேசியிருப்பதாக அந்த உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளார். கராச்சியில் உள்ள வீட்டில் அவரும் அவரது குடும்பத்தினரும் வாழ்கின்றனர் என்று பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசு அவரை ஒப்படைக்க மறுத்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளித்தும் அந்த நாட்டு அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது. தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில் இப்போதாவது தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லக்னோவில் நிருபர்களிடம் கூறியபோது, இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளில் தாவூத் இப்ராஹிம் முக்கியமானவர். அவர் கராச்சியில் இருப்பதை உளவு ஏஜென்சிகள் உறுதி செய்துள்ளன. கராச்சியில் இருந்துகொண்டு அவர் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x